Sunday, March 22, 2015

seeman kapadi - seeman
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டுக்களை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை  சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு இன்றும் நாளையும்  சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கபடி அணிகள் மோதுகின்றன.
வெற்றி பெற்ற அணிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பரிசுகளையும், வெற்றிக் கோப்பைகளையும் வழங்குகிறார்.
seeman kapadi - kapadi
இந்தப் பாசறை குறித்து சீமான் கூறியிருப்பதாவது:-
தேசிய தமிழ் விடுதலை மீட்புக்கான நீட்சியில் மொழி, இனம், மண், கலை, பொருளாதாரம், வேளாண்மை, சமூகம், நீர்வளம், நிலவளம், காட்டுவளம், மலைவளம், கனிமவளம், கல்வி உரிமை, வழிபாட்டு உரிமை, பெண்ணுரிமை, அரசியல் உரிமை, தொழில் உரிமை போலவே நம் பாரம்பரியம் சார்ந்த விளையாட்டுக்களையும் மீட்டெடுத்து வளர்க்க வேண்டி இருக்கிறது.
ஒரு விவசாயி செடியைப் பிடுங்கும்போது எந்த வேரும் அறுந்து விடாமல் கவனமாகப் பிடுங்குவதைப் போல, தேசிய இன மீட்பு விடுதலை அரசியலில், இழந்த எல்லாவற்றையும்  மீட்டெடுத்து வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான முன்னெடுப்பு முயற்சிதான் இந்த விளையாட்டுப் பாசறை.
நாம் தமிழர் கட்சியில்  ஒவ்வொரு படைப்பிரிவாக உருவாக்கி வளர்த்தெடுத்து வருகிறோம். இளைஞருக்கானது, மகளிருக்கானது, மாணவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு என்று படைப்பிரிவுகள்  இருப்பதைப் போல விளையாட்டுக்கும் பாசறை உருவாக்கி இருக்கிறோம். ‘உடலினை உறுதிசெய். அறிவினை வளர்த்திடு. கொள்கை வகுத்திடு. கூடிச் செயல் செய்யப் பழகு’ என்கிற  கொள்கை முழக்கத்தோடு,  அழிந்த நம் விளையாட்டை வார்த்து வளர்த்து எடுக்கப் போகிறோம்.
seeman kapadi - dinesh
நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வெளிநாட்டிலிருந்து வந்தது என்கிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. ஆனால் துடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட் அந்நிய நாட்டு விளையாட்டு தானே? அது பற்றி எதுவும் கூறுவதில்லையே, ஏன்?
கிரிக்கெட்டும் சினிமாவும் இரண்டு மதங்களாகி விட்டன என்கிறார்கள்.
கிரிக்கெட் நம் மண் விளையாட்டு இல்லையே? சொல்லப் போனால் நம் மண் சார்ந்த கபடி விளையாட்டைக்கூட வடஇந்தியாவில் விளையாடி வருகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் கபடியை சிறுசிறு மாற்றங்களுடன் நவீனப்படுத்தி விளையாடி வருகிறார்கள். .
துடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட் உயர்தட்டு மக்களின் விளையாட்டாகவே அறியப்படுகிறது.
ஓர் உண்மையைச் சொல்லவேண்டும் கிரிக்கெட் விளையாட்டில் புகழ் பெற்ற நாடுகள், தனித்திறன் விளையாட்டில் மிகவும் பின்தங்கி இருக்கின்றன. கிரிக்கெட்டை கைவிட்ட நாடுகள் தனித்திறன் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற கிரிக்கெட் மோகம் இல்லாத நாடுகளில் தனித்திறன் விளையாட்டு வளர்ந்திருக்கிறது. குழு விளையாட்டிலும் நாம் பின்தங்கி உள்ளோம். கையுந்து பந்து, கால்பந்து போட்டிகளிலும்  மேலே செல்ல முடியவில்லை. ஒலிம்பிக், ஆசிய போட்டிகளிலும் வெல்ல முடியவில்லை.
கிரிக்கெட்டுக்கு ஊடகங்கள் தரும் வெளிச்சம், அதன்மூலம் கிடைக்கும் புகழ் இதன் தாக்கத்துக்கான காரணங்கள். கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் ஓட்டப் பந்தய வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. இது ஒரு பெரிய குறை.
எனவே தமிழ் இளைஞர்களின் கிரிக்கெட் மோகம், மாயையிலிருந்து அவர்களை மீட்டு நம் விளையாட்டில் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கு, முதலில் நம் பாரம்பரிய விளையாட்டு பற்றிய புரிதலை, ஆர்வத்தை, ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும்.
இளைஞர்களையும்  மாணவர்களையும்   மாயையில் மூழ்கடிக்கிற கிரிக்கெட்டிலிருந்து மீட்கவே கோடை காலத்தில் இப்பாசறையைத் தொடங்கியிருக்கிறோம். அதனால்தான் கிரிக்கெட் காலத்தில் இளைஞர்களைக் கவனம் செலுத்த விடாமல் பாசறை நடத்துகிறோம்.
கபடியை முதலில் எடுத்துக் கொள்கிறோம். சிலம்பம், ஜல்லிக்கட்டு, கிளித்தட்டு என இது தொடரும். கிளித்தட்டு விளையாட்டை கோகோவுக்கு இணையாக உயர்த்த முடியும்.
களரி நமது கலைதான். கேரளாவில் எடுத்துக் காத்து வருகிறார்கள் அழிந்த நமது எல்லா விளையாட்டையும் உறுதியாக மீட்டெடுப்போம்.
கிரிக்கெட் மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களை தனித்திறன் விளையாட்டுகளான சிலம்பம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடைதாண்டி ஓடுதல், வேகஓடுதல், தூரஓடுதல், கையுந்து பந்து, வட்டுஎறிதல், ஈட்டிஎறிதல் போன்றவற்றில் ஈடுபாடு கொள்ள வைப்போம். தடகள, தனித்திறன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களாக மாற்றுவோம்.
தமிழ்நாடு முழுக்க பயணித்து, நுட்பமான விளையாட்டு வீரர்களை இனங்கண்டு தேர்வு செய்து, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்போம்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment