போட்டி முடிவதற்குள் அனுஷ்காவை பார்த்து பேசுவதா?: கோஹ்லி மீது விதிமீறல் புகார்
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடிய போட்டியின் இடையே விராட் கோஹ்லி விதிகளை மீறி தனது காதலி அனுஷ்கா சர்மாவை சந்தித்ததாக புகார் எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 2 ரன்கள் எடுத்த நிலையில் கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டது.
போட்டியை காண கோஹ்லியின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா வந்திருந்தார். அவர் விஐபிகள் இருக்கையில் அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.
மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டதும் கோஹ்லி நேராக பார்வையாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது காதலி அனுஷ்காவை சந்தித்து கட்டிப்பிடித்து சிரித்துப் பேசி மகிழ்ந்தார். இதை ஸ்டேடியத்தின் பெரிய திரையிலும் காண்பித்தனர்.
போட்டி முடியும் வரை அதாவது கடைசி பந்து வீசி முடியும் வரை வீரர்கள் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி கிடையாது. அப்படி இருக்கையில் கோஹ்லி ஊழல் தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறி அனுஷ்காவை சந்தித்து பேசியுள்ளார் என்று ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போட்டி முடியும் வரை பார்வையாளர்களை சந்திக்கக் கூடாது என்பது வீரர்கள் அனைவருக்கும் தெரியும். அது கேப்டன் கோஹ்லிக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும் விதிகளை மீறிய கோஹ்லி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் தெரிவிக்கப்படும் என்று அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
ஊழல் தடுப்பு பாதுகாப்பு விதிகளை கோஹ்லி மீறியதாக எங்களுக்கு புகார் வரவில்லை. வந்தால் அவரை எச்சரிப்போம் என்று நேற்றைய போட்டியை நேரில் பார்த்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.



0 comments:
Post a Comment