Wednesday, May 27, 2015


சினிமாவில் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு காதலர்களாக மாறி கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜமான காதலர்களே படத்திற்காக ஜோடி சேர்ந்து நடித்ததைப் பற்றிக் கேள்விப்பட்ட போது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றிய சம்பத்குமார் தயாரிப்பில் அன்பு. ஜி இயக்கியுள்ள ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் அறிமுகமாகி நடித்துள்ள ஜோடிதான் அந்த நிஜ காதல் ஜோடி. படத்தின் நாயகனாக நடித்துள்ள பி.ஆர். பிரபுவும், நாயகியாக நடித்துள்ள கிருத்திகா மாலினியும்தான் நிஜமான காதலர்கள்.
நேற்று பத்திரிகையாளர்களுக்காக அந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார்கள். அப்போதுதான் அந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டோம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர்கள் ஆறு ஆண்டுகளாக காதலித்துள்ளது பற்றித் தெரிவித்தார்கள்.
அது பற்றி பி.ஆர்.பிரபு கூறியதாவது,
” எனக்கு சொந்த ஊர் சேலம். வீட்டுக்கு ஒரே பையன், அப்பா அட்வகேட். நான் சென்னையில் இந்துஸ்தான் கல்லூரியில் பி.இ.முடித்தேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தேன்.
இந்தப் படிப்பு குடும்பத்தினர் திருப்திக்காகப் படித்தது. எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. நண்பர்கள் தொடர்பில் பல படப்பிடிப்புகள் சென்று ஒரு உதவி இயக்குநர் போல இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளைச் செய்வேன். இப்படி ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் பல படங்களில் வேலைகளைப் பார்த்திருக்கிறேன்.
அப்போதுதான் இப்படத்தின் தயாரிப்பாளர் சம்பத்குமார், இயக்குனர் அன்பு.ஜி பழக்கமானார்கள். அவர்கள் தனியாகப் படமெடுக்க முடிவு செய்த போது நான் நடிப்பது என்று முடிவான. படத்திற்காக கதாநாயகி தேடிய போது, பலரைப் பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. அப்போதுதான் நான் கிருத்திகா மாலினியைப் பற்றிக் கூறினேன். அதன் பின் அவரை நேரில் பார்த்துவிட்டு இந்தப் படத்தில் எனது ஜோடியாக நடிப்பதற்குத் தேர்வு செய்தார்கள்.
“நான் சினிமாவுக்கு வருவது என்று முடிவெடுத்த போது அதற்காக டான்ஸ் கற்றுக் கொண்டேன். அப்போது கிருத்திகா மாலினி அங்கு வருவார், இருவருக்கும் பழக்கமானது. ஒரு கட்டத்தில் இருவரிடையே உள்ளது வெறும் நட்பு அல்ல, ‘அதுக்கும் மேல’ என்று புரிந்து, ஐ லவ் யூ சொல்லிக் கொண்டோம். இதற்கே சில மாதங்கள் ஓடி விட்டன. இப்படி காதலித்து ஆறு ஆண்டுகள் ஆன பின்புதான் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்தோம். கிருத்திகா வெளிப்படையானவர், எப்போதும் ஜாலியாக சந்தோஷமாக இருப்பவர். அதுதான் அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம். சுருக்கமாகச் சொன்னால் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி கேரக்டர். ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் அவர் நடித்ததற்கு நேர் மாறான கேரக்டர் அவர்.
காதலிக்க ஆரம்பித்த காலத்தில் வான்வெளியில் பறப்பது போலிருந்தது. மனசுக்குள் பட்டாம்பூச்சி எல்லாம் பறந்தது. சற்றுக் காலம் கழித்து நடைமுறையில் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திக்கத் தொடங்கினோம். இருவர் வீட்டு சம்மதமும் கிடைத்தது. படப்பிடிப்பு முடிந்ததும் காதலர் தினத்தின் மறுநாள் 15.2.2015ல் சேலத்தில் திருமணம் நடந்தது. 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நடந்தது.
‘இருவர் ஒன்றானால்’ படத்தில் வருவது போல கிருத்திகாவுக்கு முன் என்னை 2,3 பேர் விரும்பினார்கள். ஆனால், அவர்களைத் தவிர்த்து விட்டேன். இன்றும் அவர்கள் என் நண்பர்கள்தான்,” என்று அவருடைய நிஜ காதல் அனுபவங்களைப் பற்றிச் சொன்னார்.
கிருத்திகா மாலினிய அவரது காதலைப் பற்றிக் கூறியதாவது,
”ஆரம்பத்தில் எங்கள் காதலை வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்கவில்லை. சினிமாவில் நடிப்பதற்கும் சம்மதிக்கவில்லை. படத்தில் கவர்ச்சி, கட்டிப் பிடிக்கிற காட்சி எல்லாம் கூட இல்லை என்று கூறினோம். ‘இருவர் ஒன்றானால்’ படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் என்றதும் சம்மதித்தார்கள்.
ஒரு வேலை என்று வந்து விட்டால் அதை முடித்து விட்டுத்தான் பிரபு அடுத்த வேலை செய்வார், அதுவரை எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார், அந்த அளவுக்கு ஊக்கமானவர். யாராவது ஒரு பொறுப்பைக் கொடுத்து விட்டால் அதை முடித்து விட்டுத்தான் மறு வேலை. அவரை நம்பி அதை விட்டு விடலாம், எப்படியும் செய்து விடுவார். அந்தக் குணம் அவரிடம் எனக்குப் பிடித்தது.
எல்லாருடனும் சுலபமாக பழகி நண்பராகி விடுவார். பந்தா இல்லை, எளிமையானவர் யாருக்கும் நண்பராகி ஆதரவு தருவார், என்னைப் பொறுத்தவரை காதல் இனிமையானதுதான். ஆனால் கனவில் மிதப்பது அல்ல.
நம் வாழ்க்கைத் துணை நம்மைப் புரிந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். சுயநலமாக என்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பதல்ல காதல் . பலம் பலவீனங்களை வெளிப்படையாகக் கூறி எல்லாவற்றையும் பகிர்வதுதான் நிஜக் காதல்.
நான் விஸ்காம் படித்துள்ளேன். விஜய் டிவியில் கூட உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளேன்.
‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்த அனுபவம் சினிமா பற்றிய பல தவறான கற்பனைகளை உடைத்தது. வெளியிலிருந்து சினிமா பற்றி சுலபமாக கமெண்ட் பண்ண முடியும், கஷ்டம் புரியாது. நான் நடித்ததன் மூலம் சினிமாவின் சிரமங்களை நேரில் அறிய முடிந்தது. இனியும் அவர் மற்றவர்களுடன் ஒரு நடிகராக நடிக்கும் போது எல்லாம் நடிப்பு என்றே பார்ப்பேன்.
நான் விளம்பரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இனி நடிப்பதா இல்லையா என்பதை ‘இருவர் ஒன்றானால்’ பட வரவேற்புக்குப் பின் தான் முடிவு எடுக்க முடியும். இருந்தாலும் விஸ்காம் படித்த நான் சினிமாவில் ஈடுபட எவ்வளவோ துறைகள் உள்ளன,” என்கிறார் கிருத்திகா.
நிஜ காதல் ஜோடி வாழ்க்கையில் ஜெயித்து விட்டார்கள், சினிமாவிலும் ஜெயிக்கட்டும்.

0 comments:

Post a Comment