Thursday, May 14, 2015


வடிவேலு இப்போது எலி படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. அதை வெளியிடும் வேலைகளில் இருக்கிறார்கள். இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் வடிவேலு. அப்போது அவரிடம், அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு, அரசியல்கடையை மூடிவைத்துவிட்டு இந்தக்கடையைத் திறந்திருக்கிறேன், அரசியலுக்கு வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் என்று சொல்லியிருக்கிறார்.

கடந்த ஆண்டு தெனாலிராமன் படவெளியீட்டுக்கு முன்னாலும் பேட்டிகள் கொடுத்திருந்தார் வடிவேலு. 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் நடித்திருக்கும் படம் என்பதால் அப்போதும் அவரிடம் அரசியல் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டது. ஏண்ணே நான் அந்தக்கடையை மூடி ரொம்ப நாளாச்சிண்ணே இப்போதைக்கு தெனாலிராமன்தான், அவனை கண்ணுங்கருத்துமா வளர்க்கிறதுதான் என் வேலை என்றும், என்னை அரசியலில் மட்டும் இழுத்து விடாதீங்க, நான் காமெடிநடிகன், இனி அனைவரையும் சிரிக்கவைப்பதையே என் கடமையாகக் கொண்டு செயல்படுவேன் என்றும் பேட்டி கொடுத்திருந்தார். 
ஒருவருட இடைவெளிக்குள் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. தெனாலிராமன் படம் சரியாகப் போகவில்லையென்பதால் அடுத்தபடமான எலியை நிச்சயவெற்றியாக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 

இதனால் படம் வெளியாகிற இந்த நேரத்தில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என்று பேட்டி கொடுப்பதன் மூலம் மீண்டும் தொடர்ந்து செய்திகளில் இருக்கும் வாய்ப்பு இருக்கும். அது படத்துக்குப் பலமாக அமையும் என்கிற கணக்குப் போட்டே அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னுதாரணமாக ரஜினியை அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரஜினி படம் வெளியாகிற நேரங்களில் எல்லாம் அரசியல் பற்றிப் பேச்சு வருவதும் அதற்கு அவர், இன்றைக்கு இங்கே இருக்கிறேன் நாளைக்கு எங்கேயோ என்பது போலப் பேசுவதையும் பார்த்திருக்கிறோம். தன் படத்தின் வெற்றிக்காக வடிவேலுவும் அதேபாணியைக் கடைபிடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.    
 

0 comments:

Post a Comment