ரஜினி முதலில் நடிக்கப் போவது ரஞ்சித் படத்திலா... மம்முட்டி பட ரீமேக்கிலா?
ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் பற்றி தொடர்ந்து பல்வேறு வதந்திகள், தகவல்கள், வதந்திகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இப்போது வருகிற தகவல்களைப் பார்த்தால் அவர் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்கவிருக்கிறார். இவற்றில் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பார் போலத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் ஐ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து எந்திரன் 2 எடுப்பார் என்று கூறப்பட்டது . இந்த படத்தில் ரஜினிக்கு விக்ரம் வில்லனாக நடிக்க பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கப்போவதாகவும் செய்திகள் உலாவந்தன. ஆனால் எதுவும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை.
இந்த நிலையில் 'லிங்கா' படத்துக்குப் பிறகு நிறைய இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டு விட்டார் இயக்குநர் ரஞ்சித் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குனர்களிடமும் கதை கேட்டுள்ளார். தற்போது அதிரடியாக ரஜினியின் அடுத்த படத்தை வளர்ந்து வரும் இயக்குனரான ரஞ்சித் இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அலுவலகம் அமைத்து முன் தயாரிப்பு வேலைகளும் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இதுவும் ஒரு டான் கதைதான். சித்திக் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் காவலன், பிரண்ட்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர்.
'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்தார். அவருக்கு அந்த படத்தின் கதை பிடித்துப் போனது. அதை தமிழில் ரீமேக் செய்து மம்முட்டி கேரக்டரில் நடிக்க விரும்பினார்.
இதையடுத்து அதன் தமிழ் ரீமேக் உரிமையை பெற மலையாள தயாரிப்பாளைரை அணுகினர். அவர் 'ஏற்கனவே அதன் தமிழ் உரிமையை 'தென்காசி பட்டணம்', பாறை, ஏய் படங்களைத் தயாரித்த எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி இருக்கிறார் என்றார். இதையடுத்து துரைராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ரஜினியை வைத்து தானே இந்த படத்தை தயாரிக்க விரும்புவதாக துரைராஜ் கூறினாராம்.
இதில் நடிப்பது குறித்தும் ரஜினி தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். ரஞ்சித் இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்கிறார். இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பாரா, இல்லை ரஞ்சித் படம் முடிந்த பிறகு 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நடிப்பாரா என்பதை ரஜினியே அறிவிக்கப் போகிறார் என்கிறார்கள். ஆக ரஜினி, தொடர்ந்து தன் ரசிகர்களை கொண்டாட்ட மூடில் வைத்திருக்கப் போகிறார்!

0 comments:
Post a Comment